வங்கக் கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடலில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்தியப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இந்த சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்டோபர் 22-ம் தேதி தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், தாழ்வு மண்டலமாக வலுவடைந்த பிறகு அது புயல் சின்னமாக மாறி வங்கக் கடலில் மத்திய – மேற்கு பகுதியில் நிலைகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புயலுக்கு ‘சிட்ரங்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வருகின்ற அக்டோபர் மாதம் 24-ம் தேதி தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், இந்த சிட்ராங் புயல் தீபாவளி பண்டிகை நேரத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தீபாவளி பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாட முடியுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
மேலும், இந்த சிட்ராங் புயல் வட தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசாவில் உள்ள பகுதிகளை பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும், கர்நாடகா, கேரளா, மாஹே, தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: தடையை மீறி போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி: அதிரடியாக கைது செய்த காவல்துறை…