சென்னை மற்றும் மதுரைக்கு இடையே செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்க ரயில்வே வாரியத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடந்த ஜூலை 25-ம் தேதி தெற்கு ரயில்வே பொது மேலாளரை, டி.ஆர்.இ.யூ. தலைவர்களுடன் சந்தித்தார்.
அதன்படி, இந்தச் சந்திப்பில், சென்னையிலிருந்து மதுரை மற்றும் மதுரையிலிருந்து சென்னை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் எனும் தொடர்வண்டியை தாம்பரத்தில் நிறுத்த வேண்டும். அதேபோல கூடுவாஞ்சேரியில் அனைத்து விரைவு வண்டிகளும் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், சு. வெங்கடேசன் முன்வைத்த இரண்டு கோரிக்கைகள் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் இப்போது பதில் அளித்துள்ளார். அதன்படி, சென்னையிலிருந்து மதுரை, மதுரையிலிருந்து சென்னை இடையே ஓடும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி தாம்பரத்தில் நிறுத்த ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், ரயில்வே வாரியம் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளிக்க மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மேலும், கூடுவாஞ்சேரியில் அனைத்து விரைவு வண்டிகளும் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தெற்கு ரயில்வே பொது மேலாளரால் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே பொது மேலாளருடனான சந்திப்பு குறித்து, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன் தேஜஸ் எக்ஸ்பிரஸ் தொடர்பான பொதுமேலாளரின் பதிலுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.