மருத்துவர் இராமதாஸூக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் தலைமையில் நாடார் சுயமரியாதை மாநாடு நேற்று நடைபெற்றது .
இந்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். மேலும், 130 சிறந்த நாடார் சங்கங்களுக்கு அவர் விருது வழங்கினார்.
அதன்பின், அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
சுயமரியாதை என்ற வார்த்தை இன்றைய தினத்தில் அவசியமான ஒரு வார்த்தை. பெரியார் அவர்களின் உழைப்பால் தான் நமக்கு ஓரளவுக்கு சமூக நீதி கிடைத்துள்ளது. இது ஜாதி மாநாடு இல்லை சமூக நீதி மாநாடு. தமிழ்நாட்டில் அதிக அளவில் உழைக்கும் ஜாதி நாடார் ஜாதி மட்டுமே.
மேலும், மருத்துவர் இராமதாஸூக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். என்னை பொறுத்தவரை ஜாதி என்பது ஒரு அழகான சொல். ஆனால் அதை வைத்து அடக்குமுறை செய்வதை நாங்கள் கண்டிக்கிறோம்.
இங்கு எல்லாமே வட்டமாக தான் உள்ளது .குடும்பம், ஜாதி, மதம் அதை தாண்டி மாநிலம் இந்தியர்கள் என பல வட்டங்கள் நம் வாழ்கையில் உள்ளது. இவ்வாறு இருக்கையில் ஜாதி என்ற வட்டத்தை மட்டும் எதிர்க்கிறார்கள் ,சிலர் ஜாதி வேண்டாம் என்கிறார்கள் . ஆனால் ஒட்டு மொத்தமாக நாம் ஜாதி வேண்டாம் என்று சொல்லி விட முடியாது.
என்னை பொறுத்தவரை நாங்கள் செய்வது ஜாதி அரசியல் கிடையாது, சமூக நீதி அரசியல். காமராஜர் ஒரு சுதந்திர போராளி என்ற வரலாறு இங்கு நிறைய பேருக்கு தெரியாது. எனக்கு காமராஜர் நிர்வாகம் மிகவும் பிடிக்கும்.
தமிழ்நாட்டின் நீர் மேலாண்மை, கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் தந்தை காமராஜர் தான். காமராஜர் ஒரு சமுதாயத்தின் தலைவர் இல்ல, இந்தியாவின் தலைவர், உலகின் தலைவர். சத்ரியர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அதற்கு காலமும் வந்து விட்டது நேரமும் நெருங்கி விட்டது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பாட்டால் மீண்டும் காமராஜர் ஆட்சியை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவோம்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார் .