ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாடு முதல்வர், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பேசியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மகளிருக்கான உரிமை தொகை 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து அடுத்த மாதம் பட்ஜெட்டில் வெளியிடப்படும் என முதல்வர் அறிவித்தார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த இன்பதுரை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி இந்த அறிவிப்பை முதல்வர் அறிவித்து இருப்பதாகவும், இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவர், ஒருவேளை முதல்வர் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்போவாதாக கூறி இருந்ததாக குறிப்பிட்டால், அது மக்களை ஏமாற்றும் மோசடி என கூறினார்.
தொடர்ந்து பேசிய இன்பதுரை, தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய இந்தப் பேச்சு எல்லா தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பானதாகவும், அதனால் முதல்வர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
512 கிலோ வெங்காயத்தை விற்ற விவசாயி; கிடைத்த லாபம் ரூ.2 மட்டும்….