பிரதமர் மோடி குறித்து பேசியது தொடர்பாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி வருகிற 15 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கும் தொழிலதிபர் அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்து பேசினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 4 முக்கியக் கேள்விகளையும் எழுப்பினார்.
இந்நிலையில், தான் வைத்த குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி எந்தவித ஆதாரத்தையும் சமர்ப்பிக்காததால், அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மக்களவை உறுப்பினர் நிஷிகாந்த் துபே, சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் நிஷிகாந்த் துபே, குடியரசுத் தலைவர் உரைமீது நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மீது ஆதாரமற்ற, அவதூறான களங்கம் விளைவிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை கூறி இருப்பதாகவும், தனது குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரத்தையும் அவர் சபைக்கு அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் ராகுல் காந்தி சபையை தவறாக வழிநடத்தி இருப்பதாகவும், அவர் சபை விதிகளை மீறி இருப்பதாகவும், அதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் நிஷிகாந்த் துபே குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், இவர்கள் இருவரும் எழுதிய உரிமை மீறல் சுற்றறிக்கைக்கு பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.
விஜய்யின் ‘லியோ’ படக்காட்சிகள் இணையத்தில் கசிவு; அதிர்ச்சியில் படக்குழு!