காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பும்ரா, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர், பும்ரா. 29 வயதாகும் இவர் இதுவரையில் இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பும்ரா இடம்பெறவில்லை. இதன்பிறகு, பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சையும் பயிற்சியும் பெற்று வந்த பும்ரா, முழு உடற்தகுதியை அடைந்துள்ளார்.
இதனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார். இந்நிலையில், தற்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா காயமில்லாமல் இருக்க வேண்டும் என்பதால் அதுவரை அவருக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை பிசிசிஐ பும்ரா குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் வருகிற 10, 12, 15 தேதிகளில் ஒருநாள் ஆட்டங்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘சில குறைபாடுகள் இருக்கலாம்’ – கலாச்சார விழாவில் முதல்வர் பேச்சு