மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வரான ஓ. பன்னீர்செல்வமும் தனித்தனியே வந்து மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி ஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் புகைப்படம் வைத்தும், அவரின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடபப்டி பழனிசாமி, எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன் இருந்தனர். அவர்களும் எம்.ஜி.ஆருக்கு மலர்தூவி நினைவஞ்சலியை செலுத்தினர். இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆரின் நினைவு நாளுக்கான உறுதிமொழியை ஏற்றனர்.
அதேப்போன்று தற்போது அதிமுகவின் 2-வது அணியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுவினர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதே சமயம், வி.கே சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் மரியாதை செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர் நினைவு தினம்; மரியாதை செலுத்திய புதுச்சேரி முதல்வர்..