தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று புதன்கிழமை சந்திக்க இருக்கிறார்.
சென்னை கிண்டில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நண்பகல் 12.45 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது. இதில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மூத்த நிர்வாகிகளும் உடன் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கே.பி. முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடன் இருப்பார்கள் என சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தமிழக அரசை குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் இது தொடர்பாக ஆளுநரிடம் அவர் புகார் மனு அளிப்பார் என கூறப்படுகிறது.
தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி 2 பயணமாக தில்லி சென்று திரும்பி உள்ளார். இந்நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.