சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இளம்பெண்களை அனுமதிக்க கேரள அரசு மீண்டும் முயற்சி செய்வதாக கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சபரிமலை தரிசனத்திற்கு இளம்பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதனை நடைமுறைப்படுத்தியது. இதன் காரணமாக கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் கேரளாவின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனிடையே, இது தொடர்பான வழக்கு விசாரணை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட விதிமுறை புத்தகத்தில், சபரிமலைக்கு வரும் அனைவரையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக கொச்சியில் அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சபரிமலை கோயிலுக்கு இளம்பெண்களை அனுமதிக்க கேரள அரசு மீண்டும் முயற்சி செய்து வருவதாகவும், இதனை காவல்துறைக்கு வழங்கியுள்ள கையேடு உறுதி செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் சுரேந்திரன், இந்தச் செயலை வன்மையாக கண்டிப்பதாகவும், இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும், இளம் பெண்களை மீண்டும் கோயிலில் அனுமதித்தால் கேரளாவில் மீண்டும் கலவரம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக சபரிமலையில் 10 வயதுக்கு கீழும் 50 வயதுக்கு மேலும் உள்ள பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையே தொடரும் என்றும், நீதிமன்றத்தின் பழைய உத்தரவு தவறுதலாக அச்சடிக்கப்பட்டதாகவும் கேரள தேவசம் வாரியத்தின் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விரைவில் வருகிறது ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை; புதிய ஒப்பந்தம் கையெழுத்து