தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிலையில் திமுக அதிமுகவுக்கு மாற்றாக பாமக இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடலூர் கிழக்கு, வடக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் கூட்டம் வடலூரில் (செப்டம்பர் 29) நடைபெற்றது. அதேபோல், விருத்தாச்சலம் அடுத்த சின்னகண்டியாங்குப்பத்தில் புதிய நிர்வாகிகளுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், முன்னோடிகளை சந்தித்து பாமகவின் செயல் திட்டங்கள் குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும், நடைபெற உள்ள தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
இந்த இரு கூட்டங்களிலும் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் அம்பிகா சர்க்கரை ஆலையை அரசு ஏற்று நடத்த வேண்டும். கச்சிராயநத்தம் கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுவதற்கு அழுத்தம் கொடுப்போம். இல்லையெனில் எங்களது கட்சி சார்பில் போராட்டம் நடத்துவோம்.
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைந்துவிட்ட நிலையில், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தற்போது பாமக இருக்கிறது. எனவே, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாமக ஆட்சியப் பிடிக்க கட்சியினர் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.
நீர்வளம் நிறைந்த கடலூர் மாவட்டம், இன்று பாலைவனமாக மாறி வருகிறது. இதற்கு முழு காரணம் என்.எல்.சி. நிறுவனம். லாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனம் இப்பகுதி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இதற்கான ஒரு தீர்வை மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக கொண்டு வர வேண்டும்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக கவர்னர் உடனடியாக கையெழுத்திட்டு, அதனை சட்டமாக்க வேண்டும். தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தமிழக முதல்-அமைச்சரும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்ட வேண்டும். மேலும் ஆற்றில் மணல் எடுப்பதை முழுமையாக தமிழக அரசு நிறுத்துவதுடன், மணல் கொள்ளையையும் தடுத்து நிறுத்த வேண்டும். மணல் குவாரிகளை மூட வேண்டும். இல்லையென்றால் பாமக சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம்.
சமீப காலமாக ஒரு சில கட்சிகள், ஒரு சில அமைப்புகள், மக்களை மதம் சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த, சாதி சார்ந்த பிரச்சனைகளை வைத்து பிரித்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு சரியான கலாசாரம் இல்லை. அமைதியாக சகோதரர்களாக இவ்வளவு காலங்களாக வாழ்ந்து வருகிறோம். இந்த நிலை தொடர வேண்டும்.
இது போன்று பெட்ரோல் குண்டுகள் வீசும் சம்பவங்கள் நடைபெறக்கூடாது. அதனை யார் செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு வட இந்தியா போல் மாறக்கூடாது.
இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: 8 சிறுத்தைகளுக்கு 2000 பெயர்களா?.. பிரதமர் மோடியின் அறிவிப்பால் கொட்டிய பெயர் மழை