பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாயத்தில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆனால், விலைவாசி உயர்ந்து வருவதால், மக்கள் சிலர் வீட்டுத் தோட்டங்களிலேயே காய்கறித் தோட்டம் அமைத்து, தங்களுக்குத் தேவையான காய்கறிகளை விளைவித்துக் கொள்கின்றனர்.
வீட்டுத் தோட்டம் அமைக்க அதிக இடம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிற்கு முன்புறம், பின்புறம் மற்றும் மொட்டை மாடியிலும் தோட்டம் அமைக்கலாம். நம்மிடம் இருக்கும் பொருள்களுக்கு ஏற்ப, பட்ஜெட்டை மாற்றி வீட்டுத் தோட்டம் அமைத்துக் கொள்ளலாம். ஆனால், அதில் சிறு நுணுக்கங்களை அறிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.
வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான உரங்களை, நம் சமையலறை கழிவுகளில் இருந்தே உருவாக்கலாம். சிலருக்கு, வீட்டுத் தோட்டத்தில் என்ன மாதிரியான செடிகளை வளர்க்கலாம் என்பதில் சந்தேகம் உண்டு. ஆனால், சந்தேகமே இல்லாமல் வீட்டுத் தோட்டங்களில் முதலில் இடம் பிடிப்பவை காய்கறிச் செடிகள் தான்.
காய்கறிச் செடிகள் குறுகிய காலப் பயிர் என்பதால், 3 மாதங்களிலேயே நல்ல பலன்களைத் தந்துவிடும். செடி வளர்க்கும் தொட்டி முழுவதிலும் மண்ணை நிரப்பாமல், அதன் மொத்த உயரத்தில் சற்று குறைவாக மண்ணை நிரப்பி விட வேண்டும்.
மண்ணில் விதைகளை விதைப்பதற்கு முன், 6 மணிநேரம் பஞ்சகவ்யாவில் ஊற வைத்தால், விதையின் முளைப்புத்திறன் நன்றாக இருக்கும். விதையை அதன், அளவை விட 2 மடங்கு அதிகமான அளவுக்கு குழி தோண்டி விதைப்பது அவசியம்.
வெண்டைக்காய் மற்றும் கீரை ஆகியவற்றை நேரடியாக விதைக்கலாம். கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் ஆகியவற்றுக்கு குழித்தட்டுகளில் நாற்று நடவு செய்து அதன்பிறகு, பெரிய தொட்டிகளுக்கு மாற்ற வேண்டும்.
பொதுவாக நம் வீட்டில் நாட்டு வேம்பு, புங்கன், வில்வம், மாமரம், தென்னை மற்றும் வாழை என பல மரங்களை வளர்க்கலாம். இருப்பினும், எல்லா மரங்களுக்கும் ஒரே அளவிலான தண்ணீரைத் தான் கொடுக்கப் போகிறோம். ஆகவே, பழ மரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, பணம் கொடுக்கும் மரங்களுக்கும் நாம் கொடுக்கலாம்.
மேலும், மரச்சாமான்கள் செய்ய உதவும் மரங்களையும் வளர்க்கலாம். வளர்க்கக்கூடாத மரங்கள் என்றெல்லாம் எதுவும் இல்லை. பெரும்பாலும் முள் உதிரும் மரங்கள் வளர்ப்பதை, பொதுமக்கள் தவிர்த்து தான் வருகிறார்கள்.
மூலிகைச் செடிகளை நம் வீட்டில் வளர்ப்பதால், நமக்கு நல்ல பலன்களைத் தரும். ஆடாதொடை, சித்தரத்தை, துளசி, லெமன் கிராஸ் மற்றும் திருநீற்றுப் பச்சிலை உள்ளிட்ட பல வகையான மூலிகைகளை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கலாம்.
சிறிய தலைவலி மற்றும் காய்ச்சல் என்பதற்கு மருத்துவமனைப் பக்கம் போகாதவாறு, நாம் வளர்க்கும் செடிகள் மூலம் பலன் பெறலாம்.
எடுத்துக்காட்டாக துளசி கசாயம், சளியைப் போக்கும்; முடக்கத்தான் மற்றும் பிரண்டை எலும்பை பலப்படுத்தும்; திருநீற்றுப் பச்சிலை முகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வளிக்கும். இப்படியாக பல செடிகள் இருக்கின்றன.
“உணவே மருந்து” எனும் வழக்கத்தில் இருந்து நாம் வந்திருக்கிறோம். அதனை மனதில் வைத்து, நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் செடிகளை நம் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.
அடிக்கடி பணம் வேண்டுமா: அப்போ இந்த விவசாயத்தை உடனே தொடங்குங்கள்!