தில்லியிலிருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் பாகிஸ்தான் நாட்டில் திடீரென தரையிறக்கப்பட்டது.
தலைநகர் தில்லியில் இருந்து ஸ்பைஸ் ஜெட் எஸ்ஜி-11 விமானம் 150 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. இதனிடையே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தான் தலைநகரமான கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேலும், விமானத்தில் பயணித்த அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
“விமானத்தில் இண்டிகேட்டர் விளக்கில் கோளாறு ஏற்பட்டதால், விமானம் கராச்சிக்கு திருப்பிவிடப்பட்டது. பாதுகாப்போடு பயணிகள் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர். அவசர தரையிறக்கத்துக்கு அனுமதி கேட்கவில்லை. விமானம் சாதரணமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டது. கராச்சிக்கு மாற்று விமானம் சென்றவுடன் பயணிகள் அனைவரும் துபாய்க்கு புறப்பட்டு செல்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விமானப் போக்குவரத்து இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “விமானத்தின் இடது டேங்கில் எரிபொருள் குறைவாக இருந்துள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு விமானிகள் கட்டுப்பாட்டு அறையை உடனடியாக தொடர்புக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து விமானம், கராச்சி விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது. விமானம் செல்லும்போது எரிபொருள் கசிவு எதுவும் காணப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.