தனது இளம் வயதிலிருந்து இசைப் பயணத்தை தொடங்கிய யுவன் சங்கர் ராஜா, இசையமைப்பாளராகவும் பின்னணி பாடகராகவும் தனது 25 ஆண்டு கால இசைப் பயணத்தை கொண்டாடும் பொருட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் படம் இயக்கப் போவதாக கூறினார்.
பிறகு, செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த யுவன், எனக்கு இந்தி தெரியாத காரணத்தினால் தான் ‘இந்தி தெரியாது போடா’ என டி-சர்ட் அணிந்தேன் என்றார்.
எனக்கு பெரிய பெரிய விருதுகள் கிடைக்கவில்லையென்று ஒரு நாளும் வருந்தியதில்லை எனக் கூறினார். மேலும் அவர், அனைத்து இசையமைப்பாளர்களின் வாழ்விலும் ஏதோ ஓர் இடத்தில் ஆன்மிகத்திற்கு திரும்பித் தான் ஆக வேண்டும் என்றும், என் அம்மாவின் இழப்பு தான் அதற்கு காரணமென்றார்.
நா. முத்துக்குமாரும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது. மேடையில் நா. முத்துக்குமாரை மறக்கவில்லை யுவன். “ நா. முத்துக்குமாரின் இடத்தை என்னிடத்தில் யாராலும் நிரப்ப முடியாது” எனக் கூறி வருந்தினார். மேலும் அவர், லதா மங்கேஷ் உடன் பணியாற்றாமல் போனது வருத்தமளிக்கும் விடயம் எனவும் குறிப்பிட்டார்.
அவரின் பயணங்களின் போது இளையராஜா பாடல்களையே விரும்பிக் கேட்பதாகக் கூறினார்.
நடிகர் விஜயின் மகன் யுவனிசம் என டீ ஷர்ட் அணிந்தது யுவனுக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும், விஜயே எனது மகன் உங்கள் வெறியன் எனக் கூறியதையும் யுவன் சங்கர் ராஜா பகிர்ந்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.