இளம் பெண்ணை காதலித்து 68 லட்சம் ருபாய் மோசடி செய்த வழக்கில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த இளைஞரின் உடல் போரூர் ஏரியில் மீட்கப்பட்டது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவருக்கு வயது 29. இவரும் தனது பள்ளி தோழியும் காதலில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நிஷாந்த் தனது காதலியிடம் திருமணம் செய்து கொள்வதாக சுமார் 68 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார். இருப்பினும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனிடையே, நிஷாந்துக்கும் தொழிலதிபர் மகள் ஒருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. இதனை அறிந்த நிஷாந்தின் காதலி அளித்த புகாரின் பேரில் அந்தத் திருமணம் நின்றது. இதைத்தொடர்ந்து நிஷாந்த் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த நிஷாந்த் தலைமறைவான நிலையில், காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களுக்கு அவர் குறுஞ்செய்தி அனுப்பினார். இதையடுத்து, நண்பர் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு போரூர் மேம்பாலத்தின் மீது நிறுத்திவிட்டு ஏரியில் குதித்துவிட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே, தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் இணைந்து கடந்த 2 நாட்களாக நிஷாந்தின் சடலத்தை தேடி வந்தனர். இந்நிலையில் நிஷாந்தின் உடல் கிடைக்காததால் நேற்று தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மேம்பாலத்தின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அதில் இருந்த 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் ஒரு செல்போன் அவரது நண்பருடையது என்பதும், நிஷாந்தின் செல்போன் முழுவதுமாக சிம் கார்டு இல்லாமல் சேதமடைந்து இருப்பதும், தெரியவந்தது. இதனால் அவர் நண்பரின் செல்போனை எடுத்து அதிலிருந்து குறுந்தகவல் அனுப்பி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர், நிஷாந்த் உண்மையில் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது நாடகம் நடத்தினாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இன்று காலை போரூர் ஏரியில், உடல் ஒன்று மிதப்பதாக போரூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 மாடி கட்டிடம் விபத்து; 19 பேர் பலி..