தமிழகத்தில் நுகர்வோர்களுக்கு அரசின் நியாய விலைக்கடைகளின் மூலம் உணவுப்பொருட்கள் காலங்காலமாக வழங்கப்பட்டு வருகின்றன. டும்ப அட்டையின் பெயர் பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு நபர், நியாய விலைக்கடையில் உள்ள வழங்கல் கையேட்டில் கையொப்பம் செய்து அதன் பின்னர் வழங்கப்படும் உணவுப்பொருட்களை பெற்றுச்செல்வர். இதுதான் சில வருடங்களுக்கு முன்பு வரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை.
தற்போது, அந்த நடைமுறை மாற்றப்பட்டு புதிய நடைமுறை அமலில் உள்ளது. தற்போதைய நடைமுறை உயிரியளவியல் (பயோமெட்ரிக்) முறையை சார்ந்தவையாக இருக்கிறது. இம்முறையில், குடும்ப அட்டையில் உள்ள அனைவரின் கை ரேகைகளும் முதலில் உயிரியளவியலில் பதிவேற்றம் செய்யப்பட்டு சேமிக்கப்படும். அதன் பின்பு, ஒவ்வொரு முறை நியாய விலைக்கடையில் உணவுப்பொருட்களை வாங்கச்செல்லும் போதும் குடும்ப அட்டையின் பெயர் பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு நபர் உயிரியளவியல் கருவியில் கை ரேகையை வைத்துவிட்டு உணவுப்பொருட்களை பெற்றுச்செல்வர்
இந்த நடைமுறை பெரும் சிக்கல்களாய் உள்ளன. இம்முறை, கால விரயத்தை குறைக்கும் என்று எதிர்பார்த்தால் மேலும் கால விரயத்தை அதிகரிப்பதாகவே உள்ளன. ஆம்! பல சமயங்களில் கை ரேகை, உயிரியளவியல் கருவியில் சரியாக பொருந்திப்போவதில்லை. மேலும், வயதானவர்களின் கை ரேகைகள், பெரும்பாலான நேரங்களில் கை ரேகை ஏற்புடையதல்ல என்ற பதிலையே உயிரியளவியல் கருவிகள் தருகின்றன. இக்குற்றச்சாட்டு தமிழக மக்களால் தொடர்ந்து வைக்கப்பட, நெடுநாட்களுக்கு பிறகு உணவுப்பொருள் வழங்கல் துறையினர் நுகர்வோர்களின் கை ரேகைகளை புதுப்பிக்கும்படி உத்தரவிட்டது. இருப்பினும் உயிரியளவியல் பிரச்சினை நீடித்தே வந்தது.
இந்நிலையில், உணவுப்பொருட்கள் நுகர்வோர் மற்றும் வழங்கல் துறையினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இனி உயிரியளவியல் (பயோமெட்ரிக்) முறை செயல்படவில்லை என்றாலும் QR ஐ ஸ்கேன் செய்தும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்தும் உணவுப்பொருட்களை வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்களுக்கு தங்குதடையின்றி உணவுப்பொருட்கள் கிடைப்பதை நியாய விலைக்கடை ஊழியர்கள் உறுதிப்படுத்தவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நியாய விலைக்கடைகளில் ஒழுங்கான முறையில் பின்பற்றப்படுமானால், நுகர்வோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்நிகழ்வுகள் இருக்கும்.