கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஜவ்வாது மலை எழில் ஓவியமாக சூழ்ந்திருக்க நான்கு மலைகளுக்கிடையே இந்த ஏலகிரி மலை அமைந்துள்ளது. இந்த மலைப் பகுதியில் 14 மலைவாழ் கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இயற்கை எழில் சூழ ஜலகம்பாறை நீர்விழ்ச்சியும் பூங்காவும் சுவாமி மலையும் ஏலகிரி மலையில் காணக்கூடிய இடங்களாகும்.
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி:
திருப்பத்தூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் ஏலகிரி மலையில் உள்ள பள்ளத்தாக்குகள் வழியாக ஓடும் அட்டாரு நதி ஓடும் சடையானூர் என்னும் ஊரில், 15 மீட்டர் உயரத்திற்கு இந்த ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி கொட்டுகிறது. மலையில் இருந்து பல மூலிகை தாவரங்கள் வழியாக நதி வருவதால், இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதால் நோய்கள் தீரும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை ஆகும்.
சுவாமி மலையும் வேலவன் கோயிலும்:
சுவாமி மலை 4,338 அடி உயரத்தில் அமைக்கப்பெற்றுள்ளது. அங்கு ஒரு சிவன் கோயிலும் உள்ளது. ஏலகிரி மலையில் இருக்கும் மங்களம் கிராமத்தில் இந்தச் சுவாமி மலை தொடங்குகிறது. இந்தக் கிராமத்தின் நடுவே மாரியம்மன் கோயில் காணப்படுகிறது. அங்குள்ள மக்களின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமான முறையில் இருப்பதால், இங்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு புதுவித அனுபவமாக இருக்கக்கூடும்.
அதேபோல், ஏலகிரியில் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாக இருப்பது வேலவன் குடிகொண்டுள்ள முருகன் கோயில் ஆகும். இந்த மலையில் இருந்து ஒரு அழகிய காட்சியை காண முடியும். இந்தக் கோயிலில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்தக் கோயிலுக்கு வெளியே நிற்கும் கடோதகஜனின் சிலை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது. ஏலகிரி மலையில் மற்றொரு முருகன் கோயிலும் உள்ளது. இங்கு ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
அரசு மூலிகை பூங்கா:
ஏலகிரியில் மிக முக்கியமாக செல்ல வேண்டிய பகுதியில் இந்த அரசு மூலிகை பூங்காவும் ஒன்று. இந்தப் பூங்கா மூலிகைகளால் நிறைந்து காணப்படுகிறது. இந்தப் பூங்காவிற்கு சென்று வந்தாலே ஒரு புதுவிதமான புத்துணர்ச்சி கிடைக்கும். இந்தப் பூங்கா வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மூலிகைகள் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
ஏலகிரி சாகச முகாம்:
சாகசம் நிறைந்த பகுதியாக சுற்றுலா பயணிகளை கவரக் கூடிய பகுதியாக உள்ளது இந்த ஏலகிரி சாகச முகாம். இந்தப் பகுதியில் மலை ஏறுதல், மலையேற்றம், நடைபயணம், பாராகிளைடிங் போன்றவை இங்கு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கின்றன. அதே சமயம் முகாமிட்டு பலரும் தங்களின் சாகச உணர்வை கூட்டி வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏலகிரியில் இருக்கும் கலை மற்றும் சாகச விளையாட்டுகள் பெரும் அகீகாரத்தை பெற்று வருகிறது.
நிலவூர் ஏரியும் படகு சவாரியும்:
இந்த நிலாவூர் ஏரி புங்கனூர் ஏரியிலிருந்து 5.4 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இது செயற்கையான ஏரியாக அமைக்கப்பெற்றுள்ளது. ஏலகிரி மலை சுற்றுலா பகுதிகளில் இந்த நிலவூர் ஏரி மிகவும் பெயர் பெற்றது. இங்கு படகு சவாரியும் இருப்பதால் மகிழ்ச்சிக்கு குறைவு இல்லை.
அமிர்தி நீர்வீழ்ச்சியும் விலங்கியல் பூங்காவும்:
வேலூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விலங்கியல் பூங்கா இருக்கிறது. இந்தப் பூங்கா 25 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. அருகிலே நீர்வீழ்ச்சியும் இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு குதூகலத்திற்கு குறைவு இல்லை. இந்தப் பூங்காவில் வனவிலங்குகள் பெரும்பாலானவற்றைக் காணலாம். அமர்த்தி காடு தமிழகத்தின் மிகப்பெரிய காடு ஆகும். 25 கிலோ மீட்டர் காடுகளில் ஒரு பாதி வனவிலங்கு சரணாலயமாகவும் மற்ற பகுதி பாதி சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.