உலகம் முழுவதும் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மாதமாக அக்டோபர் மாதம் கடைபிடிக்கப்படுகிறது.
மார்பக புற்றுநோய் குறித்து பெண்கள் அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான தகவல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம் !
மார்பகப் புற்றுநோயும், கருப்பை வாய் புற்றுநோயும் பெண்களை தாக்கும் நோய்களில் மிக முக்கியமானதாகும். உலக அளவில் மார்பக புற்றுநோய் 11.5 லட்சம் பெண்களுக்கு உள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 2.3 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2018 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி புற்றுநோய் பாதிப்பில் 11.6 சதவீதம் , மார்பக புற்றுநோயாக இருக்கிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
உலக அளவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டும் 14 சதவீதமாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியயாவில் 2018-ஆம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 468 பேர் மார்பக புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். எனவே, மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பெண்களுக்கு மத்தியில் ஏற்படுத்துவது மிக அவசியமாக உள்ளது.
உலக அளவில் 10-ல் 1 பெண்ணுக்கு தன் வாழ்நாளில் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. WHO வெளியிட்டுள்ள தரவுகளின்படி ஆண்டு தோறும் சராசரியாக சுமார் 1.38 மில்லியன் புதிய பாதிப்புகள் மற்றும் 4,58,000 இறப்புகள் மார்பக புற்றுநோயால் ஏற்படுகின்றன.
எந்த வகை புற்றுநோய்க்குமே ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சை இந்த கொடிய நோயிலிருந்து மீள வழிவகுக்கும். ஆனால் மற்ற எந்த புற்றுநோய்க்கும் சுயபரிசோதனை செய்து கொள்ள முடியாது என்னும் போது, பெண்களை அதிக அளவில் பாதிக்கும் மார்பக புற்றுநோயை சுயபரிசோதனை மூலம் கண்டறிய முடியும் என்பது மிகவும் ஆறுதலான விஷயம்.
இதையும் படிங்க:தீபாவளியை முன்னிட்டு சாலை விதிகளை மீறினால் அபராதம் இல்லை! இனி பூங்கொத்துகளை தருவார்கள்
பரிசோதனையில், முதல் கட்டத்தில் இந்த கேன்சரை கண்டறிந்தால், உயிர்வாழும் விகிதம் 80-90% வரை இருக்க கூடும். அதுவே மூன்றாம் கட்டத்தில் கண்டறிந்தால் உயிர்வாழும் விகிதம் 50% ஆகிறது. கண்டறியும் போது நான்காம் கட்டமாக இருந்தால் நோயை குணப்படுத்த முடியாது என்கின்றனர் மருத்துவர்கள் . எனவே மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய மிகவும் பொதுவான முறையான சுய மார்பக பரிசோதனை அனைத்து பெண்களுக்கும் முக்கியமான ஒன்று.
சுய பரிசோதனை செய்து கொள்ளும் போது ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் அதாவது, மார்பக தோலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் அதை கண்டறியவும், சிவந்து போதல் அல்லது கட்டிகள் இருந்தால் உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்கவும் உதவும். இவை தவிர முலைக்காம்பு நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டாலோ, முலைக்காம்பிலிருந்து ரத்தம் அல்லது வேறு ஏதாவது திரவம் வெளியேறினாலோ அவர்கள் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். பெண்கள் தங்கள் மார்பகங்களில் கவனிக்கும் மாற்றங்கள் சில.. ஒருவேளை மார்பக புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
இதுபோன்ற அறிகுறிகள் இல்லாவிட்டாலும் 40 வயதுக்கு மேல் உள்ள அனைத்து பெண்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்திற்குள் கண்ணாடி முன் நின்று ஒவ்வொரு பெண்ணும் சுயபரிசோதனை செய்வது மிக அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மாதவிடாய் சீக்கிமே ஏற்படுதல், மெனோபாஸ் என்ற மாதவிடாய் நிற்றல் நிலை மிகவும் தாமதமாதல், 30 வயதுக்கு மேல் முதல் குழந்தை பெறுதல், குழந்தைக்கு பால் கொடுக்காமல் தவிர்த்தல் ஆகிய காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது மருத்துவர்கள் கருத்து.
இது தவிர, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்ணுதல், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மது மற்றும் புகைப்பழக்கம், உடல் பருமன் ஆகியவை மற்ற புற்றுநோய்களை போன்றே மார்பக புற்றுநோக்கும் காரணமாக இஒருக்கலாம் என்பதால் இவற்றை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மனிதர்களாகிய நாம் அனைவருமே வாழ்வதற்கு உடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாத ஒன்று.. எனவே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதை கருத்தில் கொண்டு உடல் ஆரோக்கியத்திலும் சற்று கவனம் செலுத்த வேண்டும் !