திரையுலகின் மிக முக்கிய விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் விருது. ஆஸ்கார் விருது வழங்கும் விழாவானது கடந்த மார்ச் மாதம் 27 (அமெரிக்க நேரப்படி) ஆம் தேதி நடைபெற்றது. இந்த 94-ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழா, கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியின் ஹாலிவுட் டால்ஃபி திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விருது விழாவை பிரபல காமெடி நடிகர் கிரிஸ் ராக் அவர்கள் தொகுத்து வழங்கினார். இவர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும்போது, பலருக்கும் ப்ரியப்பட்ட மற்றும் பிரபல நடிகரான வில் ஸ்மித் அவர்களின் மனைவியான ஜடா பின்கட் ஸ்மித்தின் சிகை அலங்காரம் குறித்து கிண்டல் செய்தார்.
இதைப்பொறுக்காத வில் ஸ்மித் அவர்கள் மேடையில் ஏறி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக்கின் கன்னத்திலேயே அறைந்தார். இந்நிகழ்வு உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்வுக்குப் பிறகு அதே மேடையில் வில் ஸ்மித் அவர்களுக்கு கிங் ரிச்சர்ட் திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. விருதை வாங்கும்போது, கிறிஸ் ராக்கை அறைந்ததற்கு மன்னிப்பு கேட்டார், வில் ஸ்மித்.
ஆனால், மன்னிப்போடு இந்த சம்பவம் நிறைவடையவில்லை. ஆம்! தற்போது, ஆஸ்கார் விருதை வழங்கும் அகாடமி விருதுகளின் குழுவானது, அடுத்த பத்து வருடங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித் பங்கேற்க தடை விதித்துள்ளது.
மேலும், அடுத்த பத்து வருடங்களுக்கு அகாடமி சார்பாக நிகழ்த்தப்படும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் வில் ஸ்மித் பங்கேற்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இந்த பத்து வருட தடைக்காலமானது நேற்றில் (ஏப்ரல் 8 ஆம் தேதி) இருந்து அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகாடமியின் இந்த உத்தரவுக்கு நான் அடிபணிவதாக வில் ஸ்மித் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனாலும், உலகம் முழுவதும் பரவியுள்ள சினிமா ரசிகர்கள், அகாடமி அறிவித்திருக்கும் இந்த தடை கொடியது என்றும், பத்து வருடங்கள் மிக நீண்டதும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வுகளால் வில் ஸ்மித் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆஸ்கார் விருது திரும்ப பெறப்படுமா என்ற கேள்விகள் இணையத்தை சூழ ஆரம்பித்துவிட்டது. ஆனால் விருது சம்மந்தமான எந்தவித அறிக்கைகளையும் அகாடமி விருதுகளின் குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.