கோடை விடுமுறை முடிந்த பிறகு ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 3 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 30 ஆம் தேதியும் நிறைவு பெற்றது. இதனைத்தொடர்ந்து, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்றோடு இறுதித்தேர்வுகள் முடிவடைகின்றன.
இந்நிலையில், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோடை விடுமுறை முடிந்த பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இதனிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கோடைகால விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து, 2023-2024 ஆம் ஆண்டுக்கான அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வியாண்டு நாள்காட்டியினை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகள்; மீட்க வலியுறுத்தும் அன்புமணி ராமதாஸ்!