ஆன்மிகம் என்றவுடன் பொட்டு வைப்பதோ காவித் துணி அணிவதோ இல்லை. மங்களம் பாடுவதிலும் இவர் சொன்னார் அவர் சொன்னார் என எதை எதையோ செய்வதிலும் இல்லை. ‘ஆன்மிகம்’ என்ற இந்தச் சொல் மதத்தைச் சார்ந்து இருந்தாலும் பொருள்படுவது என்னவோ நாம் கொண்டிருக்கும் மன ரீதியான நம்பிக்கையைத் தான் குறிக்கும். மனதையும் உடலையும் ஒருமித்தமாக வைத்து இருப்பது ஒரு வகை ஆன்மிகம் தான்.
ஆன்மிகம் என்பதும் ஆன்ம நிலையை உணர்த்தும். இது அனைத்தும் கடந்த நிலை.
எல்லா உயிர்களிடத்தும் அன்பைக் காட்டுதல், பணிவோடு நடத்தல், பிறரை எவ்வகையிலும் துன்புறுத்தாமல் இருத்தல் போன்றவையும் ஆன்மிகத்தில் அடங்கும்.
ஒருவருக்கு நன்மைச் செய்ய வேண்டாம். ஆனால், தீமையைச் செய்யாமல் இருப்பதே பெரிய நன்மை.
இறைவன் இருக்கிறான். அனைத்தும் அவன் தான் என்பதை விடவும் அனைத்துமே அவை செயல் என்பதை உணர்ந்து நடத்தல் ஆன்மிக வழி தான்.
ஆன்மிகத்தில் மதங்கள் பலவகை இருக்கலாம். ஆனால், எல்லா மதமும் நன்மையை மையமாகக் கொண்டே இருகின்றன. மதங்கள் அனைத்தும் ஒரு வகையான நம்பிக்கை கொண்டே பின்பற்றப்படுகின்றன.
அவை அனைத்தும் நல்வழியில் நடக்க வேண்டும் என்பதையே தான் சுட்டுகின்றன. பல விதங்கள் பல முறைகள் இருக்கலாம் ஆனால், ஆன்மிகம் என்பதில் ஒழுக்க முறைகளையே அனைத்து மதமும் குறிப்பிடுகின்றன.
ஆகையால் நம்பிக்கையையும் மன தைரியத்தையும் கொடுப்பது ஆன்மிகம். அதுவே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணர்த்தும் வடிவம்.
நாம் நம் மனதிற்கு விரோதமாக எந்த வகையிலும் நடக்க கூடாது. நாம் பிறருக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், இறைவன் மீது உண்மையான பயமும் நம்பிக்கையும் வைத்திருப்பதே முற்றிலும் சிறந்த பக்தி. அதுவே நம் ஆன்மிக வாழ்வின் முக்தி. எனவே இதுவும் ஒரு வகையான ஆன்மிகம் தான்.
எவனோ இறந்தான், எவனோ வாழ்கிறான் என்பது அல்ல வாழ்க்கை! வாழ்க்கை பொருள்பட ஆன்மிகம் இருந்தாலே போதும் அது உங்களை வழி நடத்தும்.