ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்துள்ள நிலையில், போர் சார்ந்த பதற்றங்கள் உக்ரைனில் மட்டுமல்லாமல், அதிர்வலைகளாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. உக்ரைனில் போர் ஆரம்பிக்கும் முன்னமே, உக்ரைன் மீதான போர் தாக்குதல் செயல்களில் ரஷ்ய இராணுவப்படை ஈடுபட்டது.
அப்போதே பல நாடுகளும் உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு பிரஜைகளை, உக்ரைனை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தினர். சில நாடுகள் தங்களின் நாட்டு மக்களை தனி விமானங்கள் மூலம் அழைத்தும் சென்றனர்.
இப்படியான சூழலில் உக்ரைனில் உள்ள இந்தியர்களையும், உக்ரைனை விட்டு வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. இந்தியா சார்பில் விமானம் ஒன்று உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க விரையவும் செய்தது. ஆனால், விமானம் உக்ரைனை அடைவதற்குள் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்து விட்டதால் விமானம் பாதியில் திரும்பி விட்டது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களின் நிலை என்ன என்று தொடர் கேள்விகள் எழும்பி கொண்டிருக்கிறது. இந்திய பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும், அவர்களை இநதியாவுக்கு திரும்ப அழைத்து வருவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அதே சமயம் உக்ரைனில் உள்ள தமிழர்கள் நிலை குறித்தும் கேள்விகள் எழும்ப, உக்ரைனில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் தமிழர்கள் தமிழக அரசை தொடர்பு கொள்வதற்கென தமிழக அரசின் சார்பில் தொலைபேசி எண்களும், மின்னஞ்சல் முகவரிகளும் தரப்பட்டுள்ளன.
உக்ரைன் வாழ் தமிழர்கள் இந்த தொலைபேசி எண்களையும், மின்னஞ்சல் முகவரிகளையும் உபயோகப்படுத்திக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றன.
உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் பாஸ்போர்ட் போன்ற ஆதாரங்களை எப்போதும் வைத்திருக்கவும் இந்தியர்களை வெளியேற்ற மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டவுடன் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.