பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் இன்று மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் வங்காளதேச அணிகள் நியூசிலாந்தில் உள்ள பே ஓவல் மைதானத்தில் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டியான்ட்ரா டோட்டினும், ஹெய்லி மேத்யூசும் களமிறங்கினர். வங்காளதேசப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. அந்த அணியில் அதிகபட்சமாக 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷிமைனே கேம்பெல் அதிகபட்சமாக 107 பந்துகளில் 53 ரன்களைக் குவித்தார். அந்த அணியில் நிலைத்து நின்று போராடிய இவரின் ஸ்டிரைக் ரேட் வெறும் 49.53 யே ஆகும். இப்படி, குறைவான ரன்ரேட்டுடன் விளையாடிய அவ்வணி இறுதியாக 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களைக் குவித்தது.
141 என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேச அணிக்கு ஷமீமா சுல்தானா மற்றும் ஷர்மின் அக்தர் ஆகியோர் தொடக்கம் தந்தனர். மேற்கிந்தியத்தீவுகளின் சார்பில் பந்துவீசிய ஹெய்லி மேத்யூசின் அற்புதமான பந்துவீச்சில் ஷமீமா சுல்தானா டக்-அவுட் ஆனார். அடுத்தடுத்து நடந்த பவுலிங் தாக்குதலில் நிலைகுலைந்த வங்காளதேச அணி தட்டுத்தடுமாறி 49 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களைக் குவிந்திருந்தது. கடைசி ஓவரில் 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை வீசிய ஸ்டெபானி டெய்லர் வீசிய புல்லர்-லென்த் பந்தில் பரிஹா த்ரிஷ்னா ஆட்டமிழந்து வெளியேற மேற்கிந்தியத்தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைச் சுவைத்தது. வங்காளதேச அணியில் களமிறங்கியவர்களில் 5 பேர் டக்-அவுட் ஆகி வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹெய்லி மேத்யூஸ் 4 விக்கெட்டுகளும், ஆஃபி பிளட்சர் மற்றும் ஸ்டெபானி டெய்லர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 18 ரன்களும் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ஹெய்லி மேத்யூஸ் ஆட்டநாயகி விருது பெற்றார்.