தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு போளூர் ஆடு சந்தையில் இன்று இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் ஆடு சந்தை, வாரம் தோறும் திங்கள்கிழமை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆடு சந்தைக்கு விற்பனைக்காக ஏராளமான ஆடுகள் கொண்டுவரப்பட்டன. வியாபாரிகளும் விவசாயிகளும் பல ஆயிரக்கணக்கான ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர்.
இந்நிலையில், நாளை மறுநாள் தெலுங்கு புத்தாண்டு என்பதால் போளூர் சந்தையில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. இதில் குறிப்பாக ஆந்திர மாநிலம் நெல்லூர், சித்தூர், சத்தியவேடு, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்க வந்து இருந்தனர்.
அதே சமயம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், திருச்சி, தேனி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பல வியாபாரிகள் ஆடு சந்தைக்கு வந்து இருந்தனர். இதன் காரணமாக ஆடுகளின் விலை மிகக் கடுமையாக ஏற்றம் கண்டது.
ஒரு ஆடுடைய விலை 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானதால், ஆட்டின் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்படி போளூர் ஆடு சந்தையில் இன்று 2 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
வெளியானது, பத்து தல படத்தின் டிரைலர்!