தமிழகத்தில் தொடர்ந்து அதிகாலை குளிர் அதிகரித்து வருகிறது. அதே சமயம் வறண்ட வானிலையே பெரும்பாலும் தென்படுகிறது.
இந்நிலையில், கிழக்கு திசையில் ஏற்பட்டுள்ள காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு நாளை மறுநாள் 18-02-2022 அன்று தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவில், சுமார் ஐந்து சென்டிமீட்டர் அளவு கன்னியாகுமரியில் உள்ள சிவலோகம் எனும் பகுதியில் மழை பெய்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.