இலங்கையில் நீடிக்கும் மிகக் கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதித்து வருகின்றனர். கடும் விலைவாசி உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு இருப்பதால் மக்கள் அன்றாட உணவை உண்ணக் கூட முடியாத பஞ்சம் நிலவி வருகிறது.
அதிக நேரம் மின்வெட்டு காரணமாக மிகச் சிறிய அளவிலான உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் விரக்தி அடைந்துள்ளனர். மேலும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால் மக்கள் பல மணி நேரம் வரிசையில் நின்று காத்துக் கிடக்கின்றனர். மேலும் சிலர் இந்த பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடித்து வருவதால் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் வழியாக இந்தியாவிற்கு வருகின்றனர். இந்திய அரசும் இலங்கைக்கு உதவி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு மக்கள் பலர் ஒன்றாகத் திரண்டு இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சேவின் வீட்டை சுற்றி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதில் ஜனாதிபதி ராஜபக்சேவை எதிர்த்து போராட்ட முழக்கங்கள் கூறப்பட்டன. போராட்டக்காரர்களை அடக்க முயன்ற காவல் துறையினர் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். மேலும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். மேலும் போராட்டக்காரர்கள் காவல் துறையின் வாகனங்களை தீயிட்டு கொளுத்தி சேதப்படுத்தி உள்ளனர். இதனால் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
மேலும் பதற்றமான சூழ்நிலை நிலவியதால் கொழும்பு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. மேலும் இன்று அதிகாலை வரை ஊரடங்கு நீடித்தது. பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 5 காவல் அதிகாரிகள் காயம் அடைந்ததாகவும் தெரிகிறது. மேலும் காயமடைந்த இலங்கை காவல் துறை அதிகாரிகளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டக் களத்தில் வன்முறையாளர்கள் கலந்துக் கொண்டு போராட்டத்தை வன்முறையாக மாற்றினர். இது மட்டும் அல்லாமல் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே தனது பாதுகாப்பு குறித்தும் இந்தப் போராட்டம் குறித்தும் புலனாய்வுக் குழு எந்தவித தகவல்களையும் அளிக்கவில்லை என்று புலனாய்வுக் குழுவை கடுமையாக கண்டித்துள்ளார். மேற்கூறிய வண்ணம் இலங்கை செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.