கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்!
– வாலி
நினைத்துக் கொள்ளுங்கள் ஒரு உணர்வு உங்களுக்கு வேண்டாம் அதன் மீது நாட்டம் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட படைப்பின் மூலமோ, உரையாடல்கள் மூலமோ எவரும் உங்களின் மீது திணிக்காமல், ‘நீங்கள் வேண்டாம்’ என இருக்கும் அந்த உணர்வை, நீங்கள் உங்களை அறியாமலே உணர்கிறீர்கள் என்றால், பார்த்த படைப்போ அல்லது நிகழ்ந்த உரையாடலோ வீரியம் மிக்கது என்றுதானே அர்த்தம். இப்படியான வீரியம் மிக்க கதையை, திரைக்கதையை கொண்டதுதான், கடைசி விவசாயி!
வாழ்வியல்
திரைக்கதை ஆரம்பிக்கும் போதே, நாம் ‘கடைசி விவசாயி’ என்ற தலைப்பை வைத்துக்கொண்டு எண்ணிய கதையை, ‘இல்லை’ என்று கூறிவிட்டது, காட்சிகள். பின் என்னதான் இந்த கதை? என்று யோசித்த படியே திரைப்படத்தை பார்க்க ஆரம்பித்தால், அமைதியாக நிதானமாக மாயா ஜாலங்களை நிகழ்த்தி விடுகிறது, திரைப்படம்.
விவசாயத்தை கற்பது குறித்து பலவை முன்வைக்கப்பட, அடிப்படையாக இதுதான் விவசாயம் என்று படத்தின் முதன்மை கதாப்பாத்திரம் சொல்வது நம்மை சிந்திக்கவும் அறையவும் செய்கிறது.
திரைப்படத்தின் மிக முக்கிய அம்சம் இதுதான் என்று ஒன்றை சொல்லவே முடியாது என்பதுப்போல் இத்திரைப்படம் பலவையை தன்னுள் கொண்டுள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வசனங்கள், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை, காட்சிகள் காண்பிக்கப்படும் விதங்கள், காட்சிகளுக்கு பின்னே இருக்கும் உவமைகள், எளிமையான மக்கள் இவை அனைத்திற்கும் ஆதியாய் திரைப்படத்தில் இருக்கு இயற்கை என அனைத்தும் நம்மை மென்மையாய் வியக்க வைக்கின்றன.
உவமையாக உண்மைகள்
ஏன் நாம் இயற்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று திரைப்படம் முழுவதும் வெளிப்படையாக சொல்லாமல் உவமையாக சொல்லியது வரவேற்கத்தக்கது. திரைப்படத்தில் பல வசனங்கள், அதன் பின் கொண்டுள்ள உண்மையை உவமையாக வைத்திருக்கிறது.
கடைசி விவசாயி, விவசாயத்தை மட்டும் அல்ல மனிதப் பண்பாட்டை, வழிமுறையை, ஆன்மிகத்தை, இயற்கையை, எதிர் நோக்கும் அழிவை, குற்ற உணர்ச்சியை, வாழ்வின் மீதான நம்பிக்கையை, கருணையை மிக மிக அடிப்படையாக அதே சமயம் ஆக்கப்பூரவமாக நமக்கு சொல்கிறது. இக்கதையில் நமக்கு கருத்து சொல்லப்படுகிறது ஆனால் சொல்வது கருத்து என்ற தோரணை துளியும் இல்லை. தோன்றும் எண்ணமெல்லாம் வாழ்வியல்தான்!
நம் மனிதர்கள்
கடைசி விவசாயி திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பெரியவரின் நடிப்பு அசாத்தியமனதாக இருக்கிறது. “பல நாட்களுக்கு பிறகு எளிய மனிதர்கள் நம் வாழ்வியலில் அன்றாடம் சந்திக்கும் அல்லது சந்தித்த மனிதர்களை கொண்டு ஒரு திரைப்படம் வந்துள்ளதே மிகவும் இரசிக்கும்படியான விடயம்தான்”.
விஜய் சேதுபதி இப்படத்தில் நாயகன் இல்லை. அவர் ஒரு கதாப்பாத்திரம் நம்மை அமைதியால் வெறுமனே கதாப்பாத்திரமாக வாழ்தலின் மூலம் நமக்கு அவர் சொல்லும் வாழ்வியல் பிரம்மிக்க வைக்கிறது. விஜய் சேதுபதி தான் வாழ்ந்த கதாப்பாத்திரத்தின் மூலம் நமக்கு தரும் உணர்வு என்பது அலாதியானது. புதிரானது. இரசிக்க கூடியது.
திரைப்படம் முழுவதும் இயல்பாகவே கதைச்சொல்லிய விதத்தை வியந்து பேசாமல் இருக்க முடியவில்லை. அழகியல் என்பதே இயல்புதானல்லவே! வட்டார வழக்கு உரையாடல்கள் சில இடங்களில் பலருக்கு புரியாமல் போக வாய்ப்பிருந்தும் கடைசி விவசாயி இயல்பாக இருந்த விதம் பாராட்டுக்குரியது. இயக்குநர் மணிகண்டன் அவர்களுக்கு, இப்படத்திற்காக விருதுகள் வந்தடையும் என்பதில் ஐயம் இல்லை.
துளியும் அலட்டல் இல்லாத இயல்பான அழகியலுடன் கூடிய வாழ்வை திரைப்படத்தில் பார்க்க வேண்டும் என்பவர்கள் நிச்சயம் இத்திரைப்படத்தைக் காணலாம்.
மற்றவர்களும் பார்க்கலாம், யார் இந்தத் திரைப்படத்தை பார்த்தாலும், நிச்சயமாக புதுவித அனுபவத்தைக் கடைசி விவசாயி கொடுக்கும்.