நடிகர் விஜய் அவர்கள் அரசியல் பக்கம் வருவது ஏறத்தாழ உறுதியாயிற்று. விஜய் அவர்களின் செயல்களும் அவ்வாறே இருக்கச்செய்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெற இருக்க, தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது.
இத்தேர்தல் களத்தில் நடிகர் விஜய் அவர்களின் விஜய் மக்கள் இயக்கம் ஏற்கனவே போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. அதன்படி, விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தேர்தலில் போட்டியிடும் அனைவரும் தேர்தல் சின்னமாக ஆட்டோ சின்னத்தைதை கேட்டு போட்டியிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அப்படியான சின்னத்தை தர மறுத்துவிட்டது.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை எனவும், எந்த கட்சிக்கும் ஆதரவு தராமலும், நடிகர் விஜய்யின் உத்தரவின் படி விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் மூலம் இதுவரை செய்த நற்பணிகளை மக்களிடம் கொண்டு செல்லவும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் விஜய் அவர்கள் புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்களை சந்தித்து பேசியது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.