வேலூர் ஹிஜாப் விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையில் ஹிஜாப் அணிந்த சில பெண்கள் தங்களது நண்பர்களுடன் சென்றனர். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அந்தப் பெண்களை வழிமறித்து ஹிஜாப்பை கழற்றுமாறு வற்புறுத்தியதோடு, அதனை காணொளியாகவும் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்தக் காணொளி சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக காணொளியை எடுத்தவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்கள் என 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்போது அனைத்து விவரங்களும் வெளியிடப்படும் என கூறினார்.
அதோடு, வேலூர் கோட்டையில் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் எந்தவித பயமும் இன்றி வந்து செல்வதாகவும் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் சாதனைப் படைத்த வங்க தேச வீரர் ஷகிப் அல் ஹசன்…