தமிழ்நாட்டில் மொத்தமாக தற்போது 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. இவற்றில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன. 138 நகராட்சிகள் இருக்கின்றன. இதில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன.
490 பேரூராட்சிகளும் அவற்றில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் இருக்கின்றன. மொத்தமாக 12,838 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்படுவார்கள். இவற்றில் ஏற்கெனவே 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளை பிடிக்க 57,746 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கடந்த பத்தொன்பதாம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற தேர்தல் எந்த அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குச்செலுத்தும் நேரம் முடிந்ததும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு உட்பட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட இருக்கிறது. ஒவ்வொரு மையங்களிலும் துணை ஆணையர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது. மேலும் வாக்கு எண்ணும் நாளில் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு கருதி வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை எந்த கட்சிகள் எங்கெங்கே வெற்றிப்பெறும் என்றும், எந்தெந்த சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் வெற்றிப்பெற போகிறார்கள் என்றும் தீவிர விவாத நிலை தமிழகம் முழுவதும் நீடிக்கிறது.