வாழ்வின் சகலமும் அடித்து நொறுக்கப்பட்டப்பின், கடவுளை நம்பிய கைகளால் கடவுளின் உருவப்படங்களை தூக்கி எறிந்தப்பின், வாழ்வின் மீதான வெறுப்பு உச்சத்தை அடைந்து, மரணிக்க இயலாமல் ஒரு வாழ்வு சென்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு பிடிப்பாய், நம்பிக்கையின் சாயலாய், முறிந்த வாழ்வில் மீண்டும் புது கிளைகள் உருவாகி அவற்றில் பூ பூக்கும் என்ற எண்ணத்தை ஏதோ ஒன்று தந்தால் அதை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? வரம், பொக்கிஷம், தேவதை இவைகள் அல்லாமல் ஏதோ ஒன்றாக கூட இருக்கட்டும். ஆனால் அப்படியொன்று கிடைக்கையில் அதை தவற விடாமல் இருக்க மனம் செய்யும் நிகழ்வுகள் வலியின் இன்பத்தால் ஆனது.
வரம், பொக்கிஷம் என மேற்கூறியவை ஒரு உறவின் சாயலில் கிடைக்கும்போது, அந்த உறவுக்கு பெயர் என்னவென்று யோசித்து யோசித்து குழம்பி நிற்கும்போது ஒரு பாடல் அதே குழப்ப நிலையை கொண்டு ஒலிபரப்பானது. தனுஷ் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்தான் அது!
காதல் கொண்டேன் என்றால் பலருக்கும் “நெஞ்சோடு” கலந்திடு முதலில் தோன்ற, அப்படத்தின் பிற பாடல்கள் பின்னே தோன்றும். ஆனால் பலருக்கு தோன்றா ஒரு பாடல்தான் மேற்குறிப்பிட்ட பாடல். ஆம்! உன்னை தோழி என்பதா? என்தன் பாதி என்பதா? என தொடங்கும் பாடல்தான் அது.
யுவன் சங்கர் ராஜா இசையில், நா.முத்துக்குமார் அவர்கள் எழுதிய வரிகளை உள்ளடக்கி, இப்படியான குழப்பத்தில் இவ்வுலகில் ஒரு உயிர் மட்டுமல்ல என்று அப்பாடல் ஒலித்தபடியே கூறியது. இரு நிமிடத்திற்கும் குறைவான கால அளவை கொண்ட இப்பாடலில், கிடைத்த உறவை காதல் என்பதா? என் தேடல் என்பதா? என குழப்பம் உள்ளுக்குள் நடனம் ஆட, “ மேகம் போலவே, மனம் மிதந்து போகுதே” என மனதின் அலைதலை நா.முத்துக்குமார் அவர்கள் தெரிவித்து செல்வது மனித ஆழத்தின் கருத்து.
“மழை நின்ற போதிலும் மரக்கிளைகள் தூறுதே” என வாழ்வு நொறுக்கபப்ட்டு, தற்போது மலராய் மலர்ந்து கொண்டிருப்பதை அப்பாடல் அமைதியாய் கூறி செல்லும். குழப்ப மனநிலை தெளியவில்லை என்றாலும், குழப்ப மனநிலையில் நாம் மட்டும் இல்லை என்ற ஆறுதலை பாடல் தந்துவிட்டு செல்வது அழகு.
பாடலை கேட்க;