அணுமின்நிலையத்தினை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த உக்ரைன் இராணுவம், அதன் மின்னிணைப்புகளைச் சரிசெய்து எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடந்த அணுகுண்டு வெடிப்பு என்பது உலக மக்கள் அனைவரையும் உலுக்கி எடுத்த ஒரு கோர நிகழ்வு ஆகும். அதிலும், 1986ல் நடைபெற்ற செர்னோபில் அணுமின்நிலைய விபத்து அப்போதைய சோவியத் யூனியனையே நிலைகுலையச் செய்தது. இந்நிகழ்வுக்குப் பின்னர் இப்பொழுது தான் அந்நகரில் புற்களே முளைக்கத் துவங்கி உள்ளன. இந்நிலையில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதை எதிர்த்து அந்நாட்டின் மீது போர்தொடுத்து வரும் இரஷ்யா செர்னோபில் அணுமின்நிலையத்தை கடந்த பிப்ரவரி மாதம் கைப்பற்றியது. ஆனாலும், இரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதிலேயே மும்முரம் காட்டி வந்தன.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி செர்னோபிலின் மின் இணைப்புகளில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை உடனே சரி செய்யாவிட்டால் அணு எரிபொருள் சேமிப்பு அமைப்புகளில் அதிக அளவிலான கதிர்வீச்சு வெளிப்படும் வாய்ப்பு ஏற்பட்டு ஐரோப்பிய கண்டத்துக்கே ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது என இரஷ்யா மீது குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்நிலையில் இரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த அணுமின்நிலையத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த உக்ரைன் இராணுவம், அணுமின்நிலையத்தின் சேதமடைந்த பகுதியை சரிசெய்து விட்டதாக கூறியுள்ளார் உக்ரைன் அணுசக்தி நிறுவனத்தின் தலைவர். இனி அணுமின்நிலையத்துக்கு தேவையான மின்சாரத்தை அளிக்க முடியும் என்று கூறியுள்ளார். இதுவரை டீசல் என்ஜினில் இயங்கி வந்த அணுமின்நிலையம் விரைவில் உக்ரைனின் மின்துறை அமைப்புகளுடன் இணையும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ஒருமுறை அணுமின்நிலையத்தால் பேரழிவைச் சந்தித்த செர்னோபில் நகரம் மீண்டும் ஒருமுறை வெடித்துச் சிதறினால் நிச்சயமாகத் தாங்காது. இந்நிலையில், உக்ரைன் மற்றும் இரஷ்ய நாடுகள் போரில் ஈடுபட்டுள்ள நிலையில் இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.