உக்ரைன் மற்றும் இரஷ்யாவுக்கு இடையேயான போர் இன்று ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இரஷ்யா இராணுவம் உக்ரைனை பயங்கர வீரியத் தன்மையுடன் தாக்கி வருகிறது. கடந்த திங்கள் அன்று பெலாரஸில் நடைபெற்ற உக்ரைனுக்கும் இரஷ்யாவுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின் மூலம் போர் நிறுத்தப்படும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்த சூழலில், பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள உளவு அலுவலகங்களுக்கு அருகே வசிப்பவர்களை, உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேருமாறு இரஷ்யா அறிவுறுத்தி வருகிறது. இதனால் அங்குள்ள உக்ரைன் மக்கள் மிகவும் அச்சமுற்று இருக்கின்றனர். தற்சமயத்தில் இரஷ்ய இராணுவப்படை உக்ரைனின் பெரிய நகரங்களின் மீது தங்களின் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. உக்ரைன் இராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இப்படியான பதட்ட சூழலில் இன்று உக்ரைன் மற்றும் இரஷ்யாவுக்கு இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையானது பெலாரஸிலுள்ள எல்லைநகரமான கோமலில் இன்று நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் இரு நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட வேண்டும் என்று உலக மக்கள் பிராத்தித்து வருகின்றனர். உலக நாடுகள் இப்பேச்சுவார்த்தை குறித்த செய்திகளில்தான் கவனம் செலுத்தி வருகின்றன.