ரஷ்யா உக்ரைனுக்கும் இடையேயான போர் தீவிரத்திலும் தீவிரமாய் சென்றுக்கொண்டிருக்கிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து சூரையாடி வருகின்றனர், ரஷ்யா ராணுவத்தினர். முடிந்த வரையில் மிகவும் சிறப்பான முறையிலேயே உக்ரைன் ராணுவம் ரஷ்ய ராணுவத்திற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
உக்ரைன் சார்பில் சண்டையிட்டு வருபவர்கள் முழுவதும் ராணுவ பயிற்சியினை பெற்றவர்கள் அல்ல. உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி அவர்கள் பொதுமக்களை போரிட அழைக்க, அழைப்பை ஏற்று தங்கள் தாய் நாட்டுக்காக, தங்களின் நாட்டை அந்நிய ராணுவத்தினரிடத்தில் காப்பாற்ற பொதுமக்களும் உக்ரைன் ராணுவத்துடன் இணைந்து போரிட்டு வருகின்றனர்.
திரையில் வீர நாயகன் நிஜத்தில் கோழை கோமாளி என்று பொதுவாகவே ஒரு கூற்று உண்டு. நிஜத்தில் நடிகர்கள் இருப்பது அவரவரின் தனிப்பட்டது என்றாலும் இந்த கூற்று பரவலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த கூற்றை பொய்யாக்கும்படி உக்ரைனில் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
பொதுமக்கள் உக்ரைன் ராணுவத்துடன் இணைந்த பிறகு, உக்ரைன் ராணுவத்தின் செயல் வீரியம் அதிகரித்தது. அதே சமயம் இழப்புகளும் தொடர்ந்து நேர்ந்த வண்ணம் உள்ளன. இப்படியான சூழலில் போரின்போது 33 வயதான ஒருவர் இறக்க, அவருக்கான அஞ்சலிகள் உலகம் முழுவதிலிருந்தும் வந்து சேர்ந்த வண்ணம் உள்ளன. பாஷா லீ என்ற பெயரினுடைய இந்நபர், உக்ரைன் சினிமாவில் நடிகராக இருந்தவர். பாஷா லீ ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து போரிடுகையில் உயிர் நீத்துள்ளார். வீர மரணம் அடைந்து உயிர் தியாகம் செய்த பாஷா லீ அவர்களுக்கு சக நடிகர்களும், ரசிகர்களும் பொதுமக்களும் உணர்ச்சிவசத்துடன் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.