தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே, மின்வெட்டு பிரச்சினை பேசுபொருளாக மாறியுள்ளது. கோடை வெயில் கொளுத்தும் நிலையில், மின்சார நிறுத்தம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று தான் கத்திரி வெயில் ஆரம்பத்துள்ளது. இனி, வெயிலின் தாக்கமும், வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் என்பதால், இனியும் மின்வெட்டு தொடரும் பட்சத்தில், மக்கள் மேலும் அவதிக்குள்ளாவது உறுதியாகி விடும்.
கடந்த மாதம் ஏற்பட்ட மின்வெட்டுப் பிரச்சினைக்கு, மத்திய அரசு போதுமான நிலக்கரியைத் தரவில்லை என்பதால் தான், மின்வெட்டு ஏற்பட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மின் உற்பத்தி நிறுத்துப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனல் மின் நிலையத்தில், நான்கு அலகுகளில் தற்போது மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளது. இதில் முதல் அலகில் மட்டும் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது. மற்ற நான்கு அலகுகளிலும், நிலக்கரி காரணமாக மின்சார உற்பத்தி நிறுத்துப்பட்டுள்ளது. இதனால், நான்கு அலகுகளிலும் சேர்த்து, 840 மெகாவாட் மின்சார உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களாகவே நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, இங்கு மின்சார உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், முதல் அலகில் மட்டுமே மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 60,000 டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், மின்சார உற்பத்தி தடைப்பட்டுள்ளதால், மின்வெட்டுப் பிரச்சனை தற்போது தீராது என்றே அனைவரும் நினைக்கின்றனர். பொதுமக்கள், மின்சாரத்தை வீணாக்காமல் சிக்கனமாய் பயன்படுத்துவதும் நல்லது.