முல்லைப் பெரியாறு ஆற்றில் புதிய அணை கட்டப்போவதாக ஆளுநர் உரையில் கேரள அரசு அறிவித்திருக்கிறது. இது குறித்து பல கட்சி தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘’142 அடி வரை முல்லைப்பெரியாறில் தண்ணீர் தேக்குமளவிற்கு அணை வலுவாக இருப்பதாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய நிலையில், அதனை ஏற்க மறுக்கும் வகையில் கேரள ஆளுநர் உரையாற்றியிருப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளில் தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகளைக் காவுகொடுத்த தி.மு.க, முல்லைப்பெரியாறு விவகாரத்திலும் கோட்டை விட்டுவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
தி.மு.கவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி கேரளாவில் நடப்பதால் முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர் திறக்கும் தமிழகத்தின் 124 ஆண்டுகால உரிமையை சமீபத்தில் பறிகொடுத்ததைப் போல புதிய அணை கட்டவும் அனுமதித்துவிடக்கூடாது. எனவே, இது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன் அப்பதிவில் தெரிவித்திருந்தார்.