இலங்கையில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள், போராட்டம் எனும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். மேலும், ராஜபக்சே குடும்பத்தினரை பதவிலகக் கோரி பல முழக்கங்களையும் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக்கையும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
கடும் பொருளாதார வீழ்ச்சியினால் தவித்து வரும் இலங்கைக்கு உதவ, இந்தியாவும் சீனாவும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எனினும் இலங்கையின் பொருளாதாரம் சிறிதும் மேம்படவில்லை. இதனால் இலங்கை அரசு அமெரிக்காவிடம் நிதியுதவி கோர, அந்நாட்டுக்கு இலங்கை நிதியமைச்சர் தலைமையிலான குழு சென்றுள்ளது.
இலங்கையில் நாளுக்குநாள் போராட்டத்தின் உத்வேகம் அதிகரித்து வருகிறது. இன்று பத்தாவது நாளாக கொழும்புவில் உள்ள பாராளுமன்றத்தின் முன்பு மக்கள் திரண்டு போராடி வருகின்றனர். மேலும் ராஜபக்சே குடும்பத்தின் வீட்டின் அருகில் நின்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மக்கள் சாதி, மொழி, இனப் பாகுபாடு இன்றி ஒரே முடிவாக, ராஜபக்சே குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவர வேண்டி போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.
இலங்கையின் இன்றைய நிலைக்கு இந்த குடும்ப அரசியலே காரணம் என்கின்றனர், மக்கள். சிறியவர்கள், பெரியவர்கள் சமூக ஆர்வலர்கள், இலங்கையில் உள்ள கட்சிகள் என அனைவரும் ஒன்று கூடி இப்போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் பதவி விலகிய அமைச்சர்களுக்கு பதிலாக புதியதாக 17 அமைச்சராகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் பாதுகாப்புடன் அவர்கள் செல்லும் சாலையிலும், இரு இளைஞர்கள் நின்று போராட்ட முழக்கங்களை எழுப்பினர்.
மக்கள் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் போராட்ட முழக்கமாக கோ ஹோம் கோட்டா (#GoHomeGota) மாறியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இந்த ஹேஷ்டேக் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் கோ ஹோம் ராஜபக்க்ஷஸ் (#GoHomeRajapakshas), ஸ்ரீலங்கா ப்ரொடெஸ்ட் (#SrilankaProtest) என்ற ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டாக மாறியுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் பொது மக்களுக்களின் சோர்வைப் போக்குவதற்காக போராட்டக் களத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்டுகின்றன. குறிப்பாக நேற்று போராட்டக்களத்தில் மக்கள், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற பயங்கரவாத வெடிக்குண்டு தாக்குதலுக்கு நீதி வேண்டும் என்று போராட்ட முழக்கங்களை பதிவு செய்துள்ளனர்.
மக்களின் இந்த தீவிர போராட்டத்தின் காரணமாக தற்போதைய இலங்கை அரசின் முடிவு என்னவாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.