திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் காந்தி சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை வெறும் இரண்டு, மூன்று ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காந்தி சந்தையில் தக்காளியின் வரத்து அதிகரித்ததால் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.3 விற்கப்படுகிறது.
ஒட்டன் சத்திரத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் விவசாயம்தான் முதன்மைத் தொழிலாக இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அதிக மழை பொழிவின் காரணமாக ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் 150 வரை சென்றது. அப்போது விளைச்சல் இல்லாததால் தக்காளியின் விலையுயர்வு அதிகமானது.
ஆனால் தற்போது, சில தினங்களாக விளைச்சல் அதிகமாக இருப்பதால் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை தக்காளிப் பெட்டிகள் வருவதால் தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தக்காளி கொள்முதல் செய்வதில் இருந்து வண்டி வாடகை, கூலி என அனைத்தின் காரணமாகவும் நட்டம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் இந்நிலை அறிந்த விவசாயிகள் பலபேர் தக்காளி செடிகளிலேயே பழங்களை விட்டு விடுகின்றன என்ற தகவலும் வருகின்றது. ஒரு பெட்டிக்கு 2 ரூபாய் லாபம் வைத்து விற்கலாம் என்று எண்ணிய விவசாயிகளுக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. காரணம் விலைக் குறைவு என்பதால் யாரும் வாங்க வருவதில்லை. அதனால் சாலை ஓரங்களில் பெட்டி பெட்டியாக கொட்டி விட்டுச் செல்கின்றனர்.
இதனால், ஒட்டன் சத்திரத்தை சுற்றியுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு இந்நிலை ஆண்டுதோறும் வருவதாகவும் இதற்கு இங்கு ஏதேனும் தக்காளி தொழிற்சாலை அல்லது இதற்கு அரசாங்கம் சிறந்த தீர்வைக் காண வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர் விவசாயிகள்.