கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கடும் வீழிச்சியடைந்து குறைந்த விலைக்கு விற்பனையாகிறது.
சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஆந்திர மாநிலம் பலமனேர், புங்கனூர் மற்றும் கர்நாடக மாநிலம் குண்டுப்பள்ளி, கோலார் ஆகிய பகுதிகளிலிருந்து இன்று 56 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.
கடந்த மே மாதம் பொழிந்த திடீர் கோடை மழையின் காரணமாக தமிழகத்தில் திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செய்யப்பட்டு வந்த தக்காளி உற்பத்தியானது கடுமையாக பாதிப்படைந்தது.
இதையடுத்து அப்பகுதியில், வியாபாரிகளும் கோயம்பேடு சந்தைக்கு தினசரி கொண்டுவரப்படும் ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களின் தக்காளியை அதிகளவில் கொள்முதல் செய்து வந்தனர். இதன்காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து விலை திடீரென அதிகரித்தது. அதிகபட்சமாக சில்லரை கடைகளிலும் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.120-யை கடந்து விற்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் மீண்டும் வழக்கம் போல் உற்பத்தி தொடங்கி, தக்காளியின் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிகரித்து வருவதால், இதன் விலையானது கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதன்காரணமாக, இன்று ஒரு கிலோ தக்காளி 13 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல், சந்தையில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலையின் வீழ்ச்சி இல்லத்தரசிகளிடையே மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காவல்துறையில் புதிய காலிப்பணியிடங்கள்!