இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு நிறைவு விழா நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில், 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டிக்காக ஃபோர்பாயின்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதி வளாகத்தில் 52 ஆயிரம் சதுர அடி பரப்பில் நவீன விளையாட்டு அரங்கத்தை சர்வதேச தரத்தில் தமிழக அரசு அமைத்தது.
ஏற்கனவே உள்ள 22 ஆயிரம் சதுர அடி பரப்பிலான அரங்கம் நவீனப்படுத்தப்பட்டது. இந்தப் போட்டி அரங்கில் மொத்தம் 700-க்கும் மேற்பட்ட சதுரங்க பலகைகள் தயார் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெற இருக்கும் நிறைவு விழாவில் வெற்றி பெற்றோருக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இவ்விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் பங்கேற்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிறைவு விழாவில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் கலந்துகொள்ள உள்ளார்.
நேரு உள்விளையாட்டரங்கில் நிறைவு விழா நடைபெறுவதையொட்டி, இன்று (ஆகஸ்ட் 9) காலை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு தீவிரம்