இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக்கொள்கின்றன. சென்னை அணிக்கு இந்த ஐபிஎல் தொடரானது இதுவரையிலும் கோணலாகவே இருந்து வருகிறது.
இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட, சென்னை அணி வெல்லவில்லை. வாய்ப்புகள் கூடினாலும் சென்னை அணி வீரர்கள் எங்கேனும் சொதப்பிவிடுகிறார்கள்.
சென்னை அணியின் தொடக்க இணை சரிவர இத்தொடரில் அமையவில்லை. மிடில் – ஆர்டர் பேட்டிங் வரிசையும் நம்பகத்தன்மையாக இல்லை. அதோடு, சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த தவறி வருகின்றனர். பவர்பிளேவில் உத்வேகத்தை அதிகரிக்க வேண்டிய தேவைகள் உள்ளது. இப்படியாக குறைகளின் பட்டியல் நீள்வது இன்று மாறும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
பெங்களூர் அணியை பொறுத்தமட்டில், இந்த ஐபிஎல் தொடரானது தோல்வியில் இருந்தே தொடங்கியிருக்கிறது. டூ பிளெசிஸ் தலைமையில் படிபடிப்படியாக தங்களின் தவறுகளை வடிகட்டியபடியே ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி வருகின்றனர். அதற்கேற்ற பலன்களையும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர். ஆம்! முதல் தோல்விக்கு பிறகு நேர்ந்தவைகள் எல்லாம் வெற்றிதான்.
பெங்களூர் அணியின் கை தற்போது ஓங்கியிருப்பதாக தோன்றினாலும், சென்னை அணி இன்று தன் முதல் வெற்றியை பெற முழுவீச்சில் போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை அணியும். பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இதுவரை 18 முறை சென்னை சூப்பர் கிங்ஸூம், 9 முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் வெற்றிப்பெற்றுள்ளன. சென்னை அணியில் டூ பிளெசிஸ் விளையாடியிருப்பது இரு அணிகளுக்குமே கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
ரவீந்திர ஜடஜா இதுவரை பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடிய 28 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தீபக் சஹார் இல்லாததின் விளைவாக பவர்பிளேவில் ஒரு விக்கெட்டை மட்டுமே சென்னை அணி கடந்த நான்கு போட்டிகளில் எடுத்துள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேலும், விராட்கோலி இன்னும் 52 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், சென்னை அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்து சாதனை புரிவார். இன்று அச்சாதனையை விராட் கோலி செய்வாரா என்ற ஆவல் அனைவரிடத்திலும் உள்ளது.
இப்போட்டியானது, நவி மும்பையில் உள்ள டி.ஓய்.மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.