தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் இன்று முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் அலுவலகத்தில் நேற்று இத்துறை தலைவர் பாலசந்திரன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
இன்று முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் எனவும் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர் இத்தேர்வானது ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார். தேர்வுக்கான முடிவுகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் சான்றிதழ் திருத்தம் மற்றும் சரிபார்ப்பு பணிகள் நவம்பர் மாதம் நடைபெறும் என்றும் கூறினார்.
குரூப் 4 தேர்வுக்கான மொத்த காலிப் பணியிடங்கள் 7383 உள்ளன என்றும் அறிவித்தார். காலை தேர்வு எழுதும் நேரமானது 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும் என்று கூறினார். மேலும் முதன் முறையாக நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரியம் போன்ற பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார். மேலும் இத்தேர்வுக்கு 25 லட்சம் வரை விண்ணப்பங்கள் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வினாத்தாள் வடிவமைப்பானது 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் என்ற விகிதத்தில் இருக்கும். 100 கேள்விகள் தமிழ் மொழி தொடர்பானதாகவும் 75 கேள்விகள் பொது அறிவு தொடர்புடைய கேள்விகளாகவும் இருக்கும். இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு தேர்வாணைய https://www.tnpsc.gov.in/ என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வுகள் குறித்த கேள்விகள் இருந்தால் 1800-419-0958 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே குரூப் 2, குரூப் 2 எ தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான இந்த மாதம் 23 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் வருகின்ற மே மாதம் 21 ஆம் தேதி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காலிப் பணியிடங்கள் 5529 என்பது குறிப்பிடத்தக்கது. பல மாதங்களாக இத்தேர்வுக்கு காத்திருந்த இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தேர்வுக்கும் தயாராகி வருகின்றனர்.