ஜார்கண்ட் மாநிலத்தின் தியோகர் மாவட்டத்தில் உள்ள பாபா பைத்யநாத் கோயிலுக்கு அருகில் உள்ளது, திரிகுட் மலை. இம்மலையில் ரோப்கார்களில் சுற்றுலாப்பயணிகள் பயணப்படுவது இயல்பு. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ரோப் கார்களில் வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் பயணப்பட்டனர்.
அப்போது, தொழில்நுட்ப கோளாறுகள் நேர்ந்து, ரோப்கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த 48 க்கும் மேலானோர் பதட்டத்தில் ஆழ்ந்தனர். இச்செய்தி விரைவாக அதிகாரிகளுக்கு கடத்தப்பட மீட்பு பணிகள் தொடங்கியது. இந்த மீட்பு பணியில் விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவம் மற்றும் இந்தோ திபெத் எல்லை போலீஸ், உள்ளூர் மக்கள் ஆகியோர் ஈடுபட்டனர். இந்தியாவின் மிக உயரமான செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தன்றே சிலர் மீட்கப்பட, அதில் ஒரு பெண் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். கடும் செங்குத்தான மலை பகுதி என்பதால் மீட்பு பணிகளில் கடும் சிரமங்கள் ஏற்பட்டன.
மேலும், மீட்கப்படும்போது நேற்று மாலை, ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டு கீழே பத்திரமாக கொண்டுவரும் பயணத்தின் போது, ஹெலிகாப்டரில் பாதுகாப்பு பெல்ட் உடைந்ததால் 1500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து ஒரு நபர் இறந்தார். அதன்பின்பு, போதிய சூரிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் , தற்காலிகமாக மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டது. மீட்புப் பணியில் இரண்டு எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில், மீண்டும் இன்று காலை மீட்பு பணியானது தொடங்கியது. 44 மணி நேரமாக நடைபெற்ற இந்த மீட்பு பணியானது நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம்! ரோப்காரில் சிக்கியிருந்த 48 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், 3 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோப்கார் விபத்து சம்பவத்தை ஜார்க்கண்ட் ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. விசாரணைக்கு முன்பாக கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் மூலம் விரிவான விசாரணை அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.