தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் திரைக்கு வர காத்திருக்கும் திரைப்படம்தான் பீஸ்ட். இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் தீலிப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்க இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில், பீஸ்ட் திரைப்படத்தின் அப்டேட்டுகள் எவையும் வெளிவராததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இருப்பினும் பீஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீடானது வருகிற 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறதென்று தகவல்கள் தீயாய் பரவின. இதனால் குதூகலமடைந்த விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தளபதி விஜய் அவர்கள் முந்தைய இசை வெளியீட்டு விழாக்களில் பேசியவற்றையெல்லாம் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், இம்முறை இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார்? இம்முறை விஜய் அவர்களின் குட்டி ஸ்டோரி என்னவாக இருக்கும் போன்ற பல கேள்விகளை ரசிகர்கள் ஆரவாராமாய் யோசித்து குதூகலித்து கொண்டிருக்க, ஒரு செய்தி அத்தனை விஜய் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது வந்துள்ள தகவலின்படி பீஸ்ட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லையாம். ஆம்! பீஸ்ட் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் திரைப்படத்தின் போஸ்ட் புரொக்டக்ஷன் பணிகள் இன்னமும் ஏராளம் இருக்கிறதாம். ஆதலால் தற்போதைக்கு பீஸ்ட் திரைப்படத்தின் போஸ்ட் புரொக்டக்ஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இம்மாத இறுதிக்குள் பீஸ்ட் திரைப்படத்தின் அத்தனை பணிகளையும் முடித்தாக வேண்டும் என்பதால் இசை வெளியீடு குறித்து எந்த யோசனையும் படக்குழுவுக்கு தற்போதைக்கு இல்லை என்றே அறியப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இருப்பினும் இசை வெளியீடு நடக்க வாய்ப்பிருப்பதாகவும் , தற்போதைக்கு யோசனை இல்லையென்றால் என்ன விரைவில் இசை வெளியீடுக்கான யோசனை வரலாம் என்றும் சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்கள் சிலர் பதிவிட்டு ஆறுதலடைந்து வருகின்றனர். விஜய் ரசிகர்களின் விருப்பப்படி பீஸ்ட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா அரங்கேறினால் நன்றாகத்தான் இருக்கும் என்பது நடுநிலையாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.