கோடை என்றாலே வெயில் தான். ஆனால், கோடையிலும் நம் தமிழ்நாட்டின் தென் மாவட்டமான தேனியில் மனதை குளிர்விக்கும் சாரல் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் மிகவும் பெயர்பெற்ற சுற்றுலாத் தளம் தான் இந்த சுருளி அருவி.
இந்த சுருளி அருவி உத்தமபாளையத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் இருக்கிறது. கம்பம் நகரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. 40 அடிகள் கொண்ட சுருளி அருவியில், நீரோட்டமானது ஜூன் முதல் அக்டோபர் வரை அதிகமாக காணப்படும். அப்போது அதிகமான சுற்றுலாப்பயணிகள் அங்கு செல்வார்கள். இந்த சுருளி அருவி மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சுருளி அருவியானது மேகமலையிலிருந்து நீரூற்றாக தொடங்கி இங்கே வருகிறது.
கோடைக்காலத்தில் இங்கு நீர்வரத்து இருக்கும் என்பதால் உடலையும் மனதையும் குளிர்விக்க மக்கள் இந்தப்பக்கம் செல்கின்றனர். தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைப்பு இந்தச் சுருளியில் பாலம் கட்டியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. சுருளி அருவிக்கு செல்ல தடையின்றி போக்குவரத்தும் எப்போதும் உள்ளது.
அதுமட்டுமல்ல, இந்தச் சுருளி அருவி இளங்கோவை அடிகள் எழுதிய சிலப்பதிகார பாடலிலும் இடம்பெற்றுள்ளது. இவ்விடத்தில் கீழ்ச்சுருளி, மேல்சுருளி என இரண்டு இடங்கள் உள்ளன. இங்குள்ள சுருளியாண்டவர் கோயில் இன்னும் புகழ்பெற்ற கோயில் சுற்றுலாத் தளமாகும்.
சுருளி வேலப்பர்:
சுருளி வேலப்பர் கோயில் இங்கு மிகவும் பிரசித்திபெற்ற தளமாகும். மேலும் இங்கு கைலாய கோவிலும் உள்ளது. இதில் முப்பது முக்கோடி தேவர்கள் வந்து தங்கி இருந்தார்கள் என்று நம்பப்படுகிறது. இங்கு இமயக்கிரிச் சித்தர் என்பவர் தவமிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்துக்களின் புனித இடங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் சுருளி நீர்வீழ்ச்சியின் அடிவாரப் பகுதிகளில் இறந்தவர்களுக்கான புண்ணியதானம் செய்யப்படுகிறது.
கோடிலிங்கம்:
சுருளி நீர்வீழ்ச்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில், சுருளி அருவி மலை சாரலில் அழகாக அமைக்கப்பெற்றுள்ளது. மேலும் இங்கு சிறிதும் பெரிதும் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட லிங்கங்கள் உள்ளன. தனியார் அமைப்பின் மூலம் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இங்கு சென்று உங்களுக்கு பிடித்தமான லிங்கங்களை வைத்து வேண்டி வரலாம்.
திராட்சைக் கனிகள்:
சுருளி அருவியைச் சுற்றியுள்ள மலைச் சாரல் பகுதிகளில் திராட்சைத் தோட்டங்கள் காணப்படுகின்றன. மேலும் இங்கு விளைவிக்கப்படும் திராட்சைக் கனிகள் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. திராட்சை தோட்டங்கள் அதிகம் இருப்பதால் இங்கு மலபார் அணில்களின் வரத்தும் அதிகம் காணப்படுகின்றது.
இந்த இடங்களுக்கு கோடையில் சென்றால் நிச்சயம் ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டு திராட்சை கனிகளை உண்டுவிட்டு திருப்தியாக வீடு திரும்பலாம்.