காவல்துறையின் ஒழுங்கு குறித்து தொடர் கேள்விகள் எழும்பிக் கொண்டிருக்கிறது. ஒழுங்கு என்பது காவல்துறையில் இருக்கிறதா என்கிற அளவுக்கு மக்களின் எண்ணமானது இருக்கிறது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே, சட்ட ஒழுங்கை பின்பற்றாமல் இருந்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழும்பி வருகின்றன. காவல்துறை தரப்பில் இருந்து, காவல்துறை அதிகாரிகள் தவறு செய்தால் பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்கப்படுவர்’ என்பதைத்தான் பதிலாக பெறமுடிகிறது. ஆனால் காவல்துறை அதிகாரிகள் தவறு செய்வதே தெரியாமல் மிகவும் கவனமாகத்தான் செய்கிறார்கள். அப்படியே வெளியே தெரிந்தாலும், தங்களின் அதிகார அடக்குமுறையின் மூலம் அவற்றை மூடி மறைத்து விடுகிறார்கள்.
சராசரி குடிமகனாக பார்த்தாலே காவல்துறை செய்யும் அட்டூழியங்கள் கண்ணுக்கு முன் புலப்பட்டு விடுகின்றன, ஆனால் அரசுகளின் கண்ணுக்கு அட்டூழியங்கள் எவையும் தெரிவதில்லை. கடவுச்சீட்டு பெறுதல், புகார் மனு, பாதுகாப்பு கோருதல் என அடிப்படைத் தேவைகளுக்குமே காவல்துறை அதிகாரிகள் இலஞ்சம் கேட்பதை நம்மால் காண முடிகிறது.
அப்படியாக, சிவில் பிரச்சினையில் வழக்குப்பதிவு செய்ய வடமதுரை போலீசார் லஞ்சம் கேட்கிறார்கள் என்றும், அவர்கள் மீது ஒழுங்கு முறை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் திண்டுக்கல்லை சேர்ந்தவரான சரவணன் பாலகுருசாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுப்ரமணியம் அவர்களின் கீழ் விசாரணைக்கு வர, விசாரித்தப் பின் சரவணன் பாலகுருசாமியின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், நீதிபதி சுப்ரமணியம் அவர்கள் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். காவல் நிலையங்களில் தற்போது உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் முப்பது நாட்கள் மட்டுமே சேமிப்பில் இருக்கும். இனி பொறுத்தப்படும் கேமராக்களில் ஒராண்டு முதல் 18 மாதங்கள் வரை சேமித்து வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இவ்வுத்தரவானது பின்பற்றப்படுமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. பொது இடங்களில், கடைகளில் சிசிடிவி கேமராக்களை வையுங்கள் என்று அறிவுரைச் செய்யும் காவல்துறையினர் தங்களின் நிலையங்களுக்குள் சிசிடிவி கேமராக்களை பொறுத்துவதில் மட்டும் தொடர்ந்து அலட்சியம் காண்பித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும், ஒராண்டு முதல் 18 மாதங்கள் வரை சேமித்து வைக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டால் பல்வேறு இன்னல்கள் குறையுமென்று மக்கள் எண்ணுகிறார்கள். நாம் கண்காணிப்பில் இருக்கிறோம் என்ற உணர்வானது பல இடங்களில் தவறு நிகழ்வதை தடுக்கும். அவ்வாறாக காவல் நிலையங்களிலும் சரிவர சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டால் காவல்துறை அதிகாரிகளில் சிலர் செய்யும் ஒழுங்கின்மைகளும் தடைபடும் என்று மக்கள் நம்புகின்றனர்.