தங்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல்களை ரத்து செய்யக்கோரி, பள்ளியில் படிக்கும் மாணவிகளை மொட்டைமாடியில் பூட்டி வைத்து போராட்டம் என்ற பெயரில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர், உத்தரபிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள்.
உத்தரபிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியில் உள்ள பள்ளியில் உள்ள மனோரமா மிஸ்ரா மற்றும் கோல்டி கட்டியார் என்ற இரண்டு ஆசிரியர்கள், தொடர்ந்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் இருவரின் மீதும் பணியிட மாற்றுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து தான் அவர்கள் இருவரும் மாணவிகளை பூட்டி வைத்து போராட்டம் என்ற பெயரில் இந்த கேலிக்கூத்தை அரங்கேற்றியுள்ளனர். இந்த சம்பவமானது கடந்த வியாழக்கிழமை நடந்தது.
நீண்டநேர போராட்டத்திற்குப் பிறகு பூட்டி வைக்கப்பட்டு இருந்த அந்த மாணவிகளை மீட்ட போலீசார், அவர்களை பள்ளி விடுதிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பேசிய லக்கிம்பூர் கேரி பகுதியின் கல்வி அதிகாரி லட்சுமிகாந்த் பாண்டே, அவர்களது ஒழுங்கீன நடவடிக்கைளை கண்டிக்கவே பணியிட மாறுதல் வழங்கியதாக கூறினார்.
அவர்களுக்கு கஸ்தூர்பா பாலிகா வித்யாலயா என்ற பள்ளியில் தான் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய உயரதிகாரிகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் எண்ணத்தில் அவர்கள் இவ்வாறு மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இருவரின் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், அவர்கள் சார்ந்த துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் இது சார்ந்த அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளியில் நல்ல பழக்க வழக்கங்களையும், ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, இவ்வாறு மோசமான செயலில் ஈடுபட்ட நிகழ்வு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படியுங்கள், வேகமெடுக்கும் கொரோனா; தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் ஆனால் ….?