சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என தேர்தல் காலம் வந்தாலே தமிழகம் எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்புக்கு உள்ளாகி விடும். அந்த வகையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது.
அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் அறிவிப்பு, வாக்கு சேகரிப்பு, கொள்கை பரப்புதல், வாக்குறுதிகளை அளித்தல், ஒரு கட்சி மற்றோரு கட்சிகளை சாடுதல் என தேர்தல் களம் அனலாய் இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆளுங்கட்சிகள் மீதான குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காய் தேர்தல் பிரச்சாரங்களின் போது பிற கட்சிகளால் எடுத்து முன்வைக்கப்பட்டன.
வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தல், அன்பளிப்புகள் அளித்தல் என மறுபுறம் பல குற்ற வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று முதல் 19-ந்தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பானது தேர்தல் நடைபெறும் நகர்ப்புற பகுதிகளுக்கு மட்டுமே செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிகளே மதுவை விநியோகிக்கும் என்றும், நகரங்களுக்கு அருகில் நகரம் மட்டுமா உள்ளது? தேர்தல் இல்லாத பகுதிகளில் இருந்து மது வருமென்றும், ஆளுங்கட்சியினர் கொண்டு வந்தால் காவல் துறை கேள்வி கேட்காது எனவும் பதிவிட்டு இந்த அறிவிப்பை நெட்டிசன்கள் கேலிக்கு உள்ளாக்கி வருகின்றனர்.