வறண்ட வானிலை மட்டுமே நிகழ்ந்து வந்த தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மிதமான மழை அவ்வப்போது பெய்தது. இந்நிலையில் இன்று சென்னை மண்டல வானிலை மையம், மன்னார் வளைகுடா வளிமண்டல சுழற்சி நிகழுவதாக தெரிவித்துள்ளது.
இன்று தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை டெல்டா மாவட்டங்கள், மதுரை,சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை பகுதியில் 8 சென்டிமீட்டர் மழையும், வேதாரண்யம் பகுதியில் ஐந்து சென்டிமீட்டரும், வேளாங்கண்ணி பகுதியில் நான்கு சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. திருத்துறைப்பூண்டி, காரைக்கால், திருக்குவளை பகுதிகளில் மூன்று சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், வளிமண்டல சுழற்சி காரணமாக மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு நாளை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையத்தால் அறிவுறுத்த படுகின்றனர்.
சென்னையை பொறுத்தவரை கடந்த வாரத்தைப்போல் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.