இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தங்களால் இயன்ற உதவியினை அளித்திடுமாறு தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், தற்பொழுது அனுமதி கிடைத்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“இலங்கையில் தற்பொழுது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில், கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைப்பதாக கூறி இருந்தேன். இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே, மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த அறிக்கையுடன் சேர்த்து மொபைல் ஆப் மூலம் பணம் செலுத்து விரும்புவோருக்கு ஏற்ற வகையில் கியூஆர் கோட் வசதியும் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள வங்கி கணக்கு ஒன்றின் எண்ணும் சேர்த்து அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு நிதி உதவி அளிக்கும் பட்சத்தில் அது முதல்வரின் பொது நிவாரண நிதி கணக்கில் சேரும். மேலும், தமிழக மக்கள் மிகவும் ஈகை குணம் கொண்டவர்கள் என்றும் அவர்கள் தாராளமாக உதவி செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க; மாருதி சுசுகி இந்தியாவின் நிகர இலாபம் இவ்வளவு கோடியா?