திமுக குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான தகுதியே இல்லாத நிறுவனத்துக்கு மின்சார ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின்சாரப் பிரச்சினை மீண்டும் ஏற்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜகவின் தலைமை அழுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்பொழுது பேசிய அண்ணாமலை, திமுகவுக்கு மிகவும் நெருக்கமான நிறுவனமான தகுதியே இல்லாத பிஜிஆர் நிறுவனத்துக்கு சுமார் 4442 கோடி மதிப்பிலான மின்சார ஒப்பந்தத்தை டேன்ஜெட்கோ வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும், பேசிய அவர், கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் 350 கோடி கடனில் இருந்ததாகவும், வங்கியில் வெறும் 35 கோடி மட்டுமே வைப்பு நிதி வைத்திருந்த நிறுவனத்துக்கு இவ்வளவு பெரிய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது எனவும், திமுகவின் ஆட்சி முடிவடைவதற்குள் 35000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இந்த முறைகேடான ஒப்பந்ததைப் பற்றி பாஜக தலைமை செபிக்கு கடிதம் எழுத இருப்பதாகவும், சிஏ மற்றும் மத்திய அரசின் துறைகளுக்கு இதனைப்பற்றி தெரியப்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.
இப்படி முறைகேடாக நிறுவனங்கள் மூலம் கொள்ளையடித்து அதனை 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றி மக்களுக்கு வழங்கி அவர்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சி எனவும் குற்றம் சாட்டினார். மேலும், சினிமா மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் இவர்களே அதிகம் இருப்பதாகவும் குற்றம் தெரிவித்தார். இப்படி முறைகேடான கார்ப்பரேட்டாக இருந்து வரும் இவர்களுக்கு பிரதமரை பற்றியோ அல்லது மத்திய அரசையோ விமர்சிக்க தகுதி இல்லை என விமர்சித்தார்.
இதுபோன்று தகுதியே இல்லாத நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஒப்பந்தம் வழங்கினால் தமிழகம் இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் மின்சார தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டது போல இந்த முறையும் பாதிக்கப்படும் என எச்சரித்த அவர், தமிழக மக்கள் யுபிஎஸ், ஜெனரேட்டர் போன்ற அவசரகால மின் உபகரணங்களை இப்பொழுதே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் எனவும் அறிவுரை வழங்கினார்.
எப்பொழுதும் திமுகவை பாராட்டியே பேசி வரும் திமுகவின் எதிர்க்கட்சிகளையும் விமர்சித்த அண்ணாமலை, ஹிஜாப் விவகாரத்தில் பள்ளிகளில் மட்டுமே தடை என்றும், பொதுவெளியில் அணிந்து கொள்ளலாம் எனவும் தெளிவுபடுத்திய அவர் இதனை வேண்டுமென்றே தவறாக பலரும் திரித்து பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.